Sunday 31 May 2015

படிக்காத மேதை காமராஜரின் தொலைநோக்கு பார்வை

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பெரும் பிரச்சனை இந்த ஆண்டு போதிய பருவமழை இருந்தும் அணைகளில் நீர் இல்லை. அணை மட்டும் அல்ல, ஏரி குளங்களிலும் நீர் இல்லை. காரணம் இவை ஒன்றுமே தூர்வாரப்படவில்லை. சட்ட அறியாமையும், துறைகளுக்கு இடையே உள்ள ஒத்துழையாமையும், பொறுப்பு எடுப்பதற்கு உள்ள தயக்கமும் மீடியாக்களின் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உள்நோக்கத்தோடு கூடிய தாக்குதல்களும் இதற்கு காரணமாக அமைகின்றன.

விவசாயத்திற்கு நீரே பிரதானம். தண்ணீரை ஏரி, குளம் அனைத்திலும் எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவு சேமித்தால் மட்டுமே விவசாயத்தை நாம் காப்பாற்ற முடியும். வறட்சி காலத்தில் மக்களுக்கு மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் தேவையையும் தீர்க்க முடியும். இவை அனைத்தையும் அரசே செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது மட்டும் அல்ல. இதனை செயல்படுத்தவும் முடியாது. இதனை கருத்தில் கொண்டு காமராஜர் முதல்வராக இருக்கும் போது ஒரு அரசாணை பிறப்பித்தார். அதன்படி ஏரி, குளங்களில் நீர் வற்றிய உடன் ஏரி, குளம் கரையில் இருந்து 20 அடி தள்ளி ஏரி, குளங்களின் உள்ளே படிந்துள்ள வண்டல் மண், சவடு மண் முதலிய அனைத்தையும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட உற்பத்தியாளர்கள், கைசெங்கல் உற்பத்தி செய்பவர்கள் இலவசமாக எடுத்து கொள்ளலாம். அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டியது இல்லை என உத்தரவு பிறப்பித்தார். இதனால் அரசு செலவில்லாமல் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு மழைக்காலத்தில் அதிக நீரை சேமித்து வைக்க தயார் நிலையில் இருக்கும். காமராஜரின் மேற்கண்ட அரசாணை 1985-க்கு பிறகு மாற்றப்பட்டு விட்டது. முதலில் செங்கல் உற்பத்தியாளர்கள் பணம் செலுத்தி இவற்றை அள்ள வேண்டும் என கையை வைத்தார்கள். பிறகு விவசாயிகள் மண் பாண்ட தொழிலாளர்கள் 50 லோடு மட்டும் இலவசமாக அள்ளலாம் என மாற்றினார்கள். தற்போது விவசாயிகளும் மண்பாண்ட தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்றே இந்த மண் அள்ள வேண்டும் என ஆணை பிறப்பித்து விட்டார்கள். இதனால் அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் இழப்பு. விவசாயிக்கு போதிய நீர் இல்லாமல் போகிறது. இடையில் விவசாயம் செய்ய முடியாமல் பயிர் கருகுகிறது. அரசுக்கு தூர்வார்வதற்கு ஏராளமாக செலவாகிறது.

ஒரு வட்டத்தில் சுமார் 200 குளங்கள் இருக்கும். இந்த 200 குளங்களையும் நீர் வற்றிய பிறகு தூர்வார வேண்டுமா என அதிகாரிகள் பார்வையிட்டு செலவு மதிப்பீடு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி அரசு அனுமதி பெறுவதற்கு முன் 3 வருடம் ஆகி விடும்;. எனவே 3 வருட விவசாயம் பாதிக்கப்படுகிறது.
தற்போது இவை அனைத்துமே சவடு மணல் என்ற பெயரில் சில தனி நபருக்கு எழுதப்படாத குத்தகையாக கொடுக்கப் பட்டுள்ளது. அவர் மாவட்ட வாரியாக சில நபர்கள் பெயரை கொடுத்துள்ளார். அவரிடம் பணம் கட்டி தான் அவர் பெயரில் தான் தற்போது விவசாயியும் குளத்தில் மண் அள்ள முடியும். இதனால் அரசுக்கு வருமானம் தமிழகம் முழுவதும் சேர்ந்து ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் குறைவு. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பல கோடிக்கு மேல். இவர்கள் சவுடு மண் என்ற பெயரில் அனுமதியற்ற இடங்களிலும், ஆற்று படுகைகளிலும் மணலை தான் அள்ளி விற்பனை செய்கிறார்கள். எனவே அனைத்து குளங்களையும் முழுவதையும் அரசே தூர்வார வேண்டும் என்றால் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். 

மாறாக காமராஜரின் அப்போதைய அரசாணையை இப்போதும் செயல்படுத்தினால் அரசுக்கு ஒரு பைசா செலவில்லாமல் குளங்கள் முழுவதும் தூர்வாரப்படும். விவசாயியும் மண்பாண்ட தொழிலாளர்களும் அல்லாமல் வேறு நபர்கள் இவற்றை அள்ளி செல்ல வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட ஊராட்சியிடம் பணம் செலுத்தி அள்ளி செல்ல வேண்டும் என அனுமதி கொடுத்தால் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கும் வருமானம் கிடைக்கும். இயற்கையாகவே ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு ஏராளமான மழை நீர் சேமித்து வைக்கப்படும். இதனால் விவசாயிகள் தண்ணீர் இல்லை என குறை சொல்லும் நிலை வராது. விவசாய உற்பத்தி கூடும்.

இவை அனைத்தையும் தொலைநோக்கோடு எண்ணி மேற்கண்ட அரசாணையை பிறப்பித்த காமராஜரை படிக்காத மேதை என மக்கள் சொல்வது இதற்கு தானோ!!.

திருத்தப்பட வேண்டிய சட்டங்கள்

தற்போது படைக்கல சட்டப்படி அரசின் அனுமதி பெற்று துப்பாக்கி, ரிவால்வர், பிஸ்டல் முதலியவை வைத்துக் கொள்ளலாம். ஒரு அனுமதி பெறுவதற்கு முதலில் 100 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். (5 வருடங்களுக்கு முன்பு இது 10 ரூபாய் தான்).

விண்ணப்பம் சமர்பித்த உடன் மாவட்ட ஆட்சி தலைவர், காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் அறிக்கை கேட்பார். காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் ஆய்வாளர், சார் ஆய்வாளர் ஆகியோரிடம் அறிக்கை கேட்பார். அவர்கள் அறிக்கை மற்றும் பரிந்துரை மற்றும் மாவட்ட வன அலுவலரின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் உரிமம் வழங்கப்படும். இதற்கு தபால் வகைக்கு மட்டும் அரசு 500 ரூபாய் செலவு செய்யும். ஆண்டுக்கு இரண்டு முறை ஆய்வு செய்ய படைக்கலத்தை கொண்டு வருவதற்கு அறிவிப்பு அனுப்பி குறிப்பிட்ட நாளில் வரவில்லை என்றால் மீண்டும் கடிதம் எழுதி இவ்வாறு ஆண்டுக்கு 300 ரூபாயும் மக்கள் நல திட்டங்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளின் பணி சுமையும் இதனால் கூடும். 

இந்த படைக்கல சட்டம் மத்திய சட்டம். பெரும் முதலாளிகள், வசதி படைத்தவர்கள் மட்டுமே பிஸ்டல், ரிவால்வர் மற்றும் ரைபிள், துப்பாக்கி ஆகியவற்றை உரிமம் வாங்கி வைத்துள்ளார்கள். அதனை புதுப்பிப்பதற்கு பிஸ்டல், ரிவால்வருக்கு ஆண்டுக்கு ரூபாய் 50-ம், ரைபிளுக்கு ரூ. 30-ம், துப்பாக்கிக்கு ரூ.20-ம் கட்டணம்.

மோடி அரசு இந்த படைக்கல சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பிஸ்டல் ரிவால்வர், ரைபிளுக்கு உரிம கட்டணம் ஒரு தவணையாக ரூ.10000 என்றும், ஆண்டுக்கு புதுப்பிக்கும் கட்டணம் ரூ.5000 என்றும், துப்பாக்கிக்கு ஒரு தடவை கட்டணம் ரூ.8000, புதுப்பிக்கும் கட்டணம் ஆண்டுக்கு ரூ.4000 என்றும் சட்ட திருத்தம் செய்தால் மாநில அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். தேவையற்ற நபர்கள் துப்பாக்கி, ரிவால்வர் லைசன்ஸ்களை சரண்டர் செய்து விடுவார்கள். எனவே அரசின் பணிசுமை குறையும். இதனை மத்திய அரசு பரிசீலிக்குமா?

அனுபவம் இல்லாத அமைச்சர்களால் மத்திய அரசின் தவறான முடிவு

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கனிம சட்டத்தை மோடி அரசு திருத்தியது. கனிம சட்டத்தில் வெளிப்படையான தன்மையை கொண்டு வருவதற்கு என இதற்கு ஒரு காரணம் கூறப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு 2ஜி ஸ்பெக்டரம் என்னும் செலவில்லா இயற்கை வளத்தை அரசு ஏலம் விடாமல் குறைந்த விலைக்கு கொடுத்தது தவறு என்று தான். அதே போல் நிலக்கரி சுரங்கங்களை மின் உற்பத்தி செய்யாதவர்களுக்கும் தேவை இல்லாதவர்களுக்கும் அரசு ஒதுக்கீடு செய்ததை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. உடனடியாக குடியரசு தலைவரிடம் இருந்து கனிமங்களுக்கு குத்தகை வழங்குவதற்கு ஏல முறை கடை பிடிக்க வேண்டுமா என கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. உச்சநீதிமன்றம் குடியரசு தலைவரின் மேற்கண்ட கடிதத்தை பரிசீலித்து ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில் தங்களது ஏலம் என்ற தீர்ப்பு 2ஜி ஸ்பெட்ரத்திற்கு தான் பொருந்தும் என்றும் கனிமங்களுக்கு இது பொருந்தாது என்றும் ஏனென்றால் அதனை வைத்து பல்வேறு உபதொழில்கள் வேலை வாய்ப்பு, பல்வேறு வகையான வரி வருவாய்கள் முதலியவை அரசுக்கு கிடைக்கும் என்றும் எனவே கனிமங்களை பொறுத்த வரையில் அரசு நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே குறிப்பிட்டது. ஏலம் விட வேண்டும் என குறிப்பிட வில்லை.

தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை திரித்து கூறி ஏல முறையை அறிமுகப்படுத்தி இந்தியாவை அந்நிய பொருளாதரத்திற்கு அடிமை பட இந்த அரசு வழி செய்து விட்டது. நிலக்கரியை ஏலம் எடுத்த நபர்கள் சொல்லும் விலைக்கு வாங்கினால் தான் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். எனவே மின்சாரம் உற்பத்தி விலை அதிகரித்து மின் கட்டணம் உயரும்.

சுண்ணாம்புக்கல் ஏலத்திலேயே இனி வாங்க வேண்டும். எனவே சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிமெண்ட் விலையை கூட்டுவதை அரசும் தடுக்க முடியாது. எனவே நடுத்தர ஏழை குடும்பங்கள் சிமெண்ட்டால் வீடு கட்டுவதை இனி கனவில் தான் கட்ட வேண்டும்.

இரும்பு தாதும் ஏலம். எனவே வீடு கட்டுவதற்காக இரும்பு கம்பிகள் விலை கூடும். எனவே சொந்த வீடு என்பது நடுத்தர ஏழை மக்களுக்கு இனி கற்பனையில் தான் சாத்தியம்.

அனுபவ அறிவு இல்லாததால் இவற்றிற்கு ஏல முறையை கொண்டு வந்தார்கள். இது பொது மக்களை கடுமையாக பாதிக்கும். விளைவு இந்திய சிமெண்ட் இரும்பை விட வெளிநாட்டு சிமெண்ட், இரும்பு விலை குறைவாக இருக்கும். எனவே இந்திய தொழில் அழியும். அன்னிய தொழில் வளரும்.

இது மக்களுக்கு விரோதமான ஒரு சட்ட திருத்தம். பெருந்தலைவர் காமராஜர் போல் அனுபவ அறிவு உள்ள எவரும் இந்த அமைச்சர் அவையில் இடம் பெறாதது தான் இதற்கு காரணம். இந்த சட்ட திருத்தத்தின் பாதிப்பு மக்களை சென்றடைய நான்கு வருடங்கள் ஆகும். இதன் எதிரொலி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தெரியும்.

கன்னிமாரா நூலகம்

சென்னையில் கன்னிமாரா நூலகம் என்பதை தெரியாத படித்தவர்களே இருக்க முடியாது. எத்தனை ஆண்டுக்கு முந்தைய பழைய பேப்பர் வெளியீடுகள் முதலியவை வேண்டும் என்றாலும் முதலில் தேடப் போவது கன்னிமாரா நூலகத்திற்கு தான். இந்த கன்னிமாரா நூலகத்தின் வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போமா!!

சென்னை எழும்பூரில் உள்ள சென்னை அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார கட்டிடத்தின் ஒரு பகுதியில் கேப்டன் ஜெசிமிக்கேல் என்பவரால் 1860-க்கும் முன்பாகவே ஒரு சிறிய நூலகம் தொடங்கப்பட்டது.

அது தான் பின்னாளில் எழும்பூர் பாந்தியன் காம்ப்ளக்ஸ் என அழைக்கப் பட்டது. இந்த பாந்தியன் காம்ப்ளக்ஸ் 1789-க்கு முன்பாகவே அமைக்கப்பட்டாலும் அரசு அதை கிரையம் பெற்றது 1830-ல் தான்.

பிறகு கன்னிமாரா நூலகத்தின் தற்போதைய கட்டிடம் 1890 மார்ச் 22-ல் தான் கட்டப்பட்டது. 

அப்போது இந்தியன் சிவில் சர்வீசஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்க இங்கிலாந்தில் உள்ள ஹெய்லி பூரி கல்லூரி தான் உபயோகப்படுத்தப்பட்டது. அந்த கல்லூரியில்; உள்ள நூலகத்தில் தான் தேவையான புத்தகங்கள் அனைத்தும் இருந்தன.

மேற்கண்ட இங்கிலாந்து நூலகத்தில் புத்தகங்கள் வைக்க இடம் இல்லாத காரணத்தால் கூடுதலாக உள்ள புத்தகங்களை சென்னை ராஜதானிக்கு இங்கிலாந்து அரசு அனுப்பியது.  மெட்ராஸ் அரசு அதை மெட்ராஸ் மியூசியத்திற்கு அனுப்பியது. 1890 வரை மெட்ராஸ் மியூசியத்தின் உள்ளே ஒரு பகுதியாக இருந்த நூலகத்தில் தான் இந்த புத்தகங்கள் பாதுகாக்கப் பட்டன.

1890 மார்ச் 22-ல் அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த லார்டு கன்னிமாரா அனைவரும் படிப்பதற்கு ஒரு நூலகம் வேண்டும் என்பதை உணர்ந்து தற்போதைய கன்னிமாரா நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது 1896-ல் கட்டி முடிக்கப் பட்டு அப்போதைய கவர்னரான சர் ஆர்தர் எலிபங்க் ஹேவக் என்பவரால் தொடங்கப்பட்டது. நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய கன்னிமாரா பெயரே சூட்டப் பட்டது. 



1929-ல் கன்னிமாரா நூலகத்திற்கு முழு நூலகர் நியமிக்கப் பட்டு இயங்க ஆரம்பித்தது. அதன் பிறகு கன்னிமாரா நூலகம் பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மெட்ராஸ் பப்ளிக் லைப்பரரி ஆக்ட் 1948 என ஒரு சட்டம் இயற்றப்பட்டு அந்த சட்டத்தின் கீழ் கன்னிமாரா நூலகம் மத்திய நூலகமாக அறிவிக்கப்பட்டது.

எனவே அவர்கள் நூலக பணிகளை ஒருங்கிணைப்பது, மேம்படுத்துவது போன்ற நூலகம் சம்பந்தபட்ட பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

1974-ல் கன்னிமாரா நூலகத்திற்கு புதிதாக ஒரு மூன்று மாடி கட்டிடம் கட்டப் பட்டது. அனைத்து நூலக பணிகளும் புதிய கட்டிடத்தில் இயங்கின. ஏராளமான அறிய வகை புத்தகங்களை மிக சரியான முறையில் அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இங்கு பாதுகாத்து வருகிறார்கள். இந்த நூலகத்தில் டெக்ஸ்ட் புக் செக்ஷன், பீரியாடிக்கல் ஹால், ரெபரன்ஸ் ரூம், வீடியோ ரூம் இந்திய மொழிகளுக்கான ஒரு தளம், பார்வையற்றவர்களுக்கான ஒரு நூலகம், இந்திய அமைச்சு பணியாளர்களுக்கான படிப்பு அறை, பிரவுசிங் சென்டர், நிரந்தரமான நூலக கண்காட்சி, நகலெடுக்கும் வசதி போன்ற அனைத்தும் உள்ளன.

இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் வெளியீடுகள் அனைத்தும் ஏதாவது ஒரு தேசிய சேமிப்பு நூலகம் என இந்திய அரசு அறிவித்துள்ள ஒரு நூலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியம். அவர்களை அதை பாதுகாத்து வருவார்கள். இந்திய அரசு 1981-ல் இந்தியா முழுவதும் இவ்வாறு நான்கு நூலகங்களை தேசிய சேமிப்பு நூலகமாக அறிவித்தது. அதில் இந்த கன்னிமாரா நூலகமும் ஒன்று. 

இதர மூன்று நூலகங்கள் 

1) ஆசியாட்டிக் சொசைட்டி ஆப் பாம்பே – மும்பை
2) நேஷனல் லைப்ரரி – கல்கத்தா
3) டெல்லி பப்ளிக் லைப்ரரி – டெல்லி ஆகும்.

எனவே தென்னிந்தியாவில் உள்ள எந்த வெளியீடு என்றாலும் நாம் கன்னிமாரா நூலகத்தில் பார்த்து எடுத்துக் கொள்ளலாம். 

கன்னிமாரா நூலகத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட 1998-ல் அரசு கன்னிமாரா நூலகத்தின் படத்தை அஞ்சல் தலையாக வெளியிட்டது.




அதே ஆண்டு இதை எலக்ட்ரானிக் மயமாக்க எட்டு லட்சம் ரூபாய் ஒதுக்கி 12 சர்வர்கள் மற்றும் இரண்டு பணியாளர்களை நியமித்து அனைத்து நூலகங்களை டிஜிட்டல் மயமாக்கி பாதுகாக்கும் பணியையும் தொடங்கியது. நூல்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அதனை சேமித்து வைக்க மேலும் இட வசதி தேவைப்பட்டதால் 1999-ல் மேலும் 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. 

கன்னிமாரா நூலகம் தேசிய நூல்கள் ஒப்படைப்பு மையமாக இந்திய அரசால் பப்ளிக் லைப்ரரி ஆக்ட் 1954 படி அறிக்கை செய்யப் பட்டுள்ளதால் அனைத்து புத்தக நூல்கள் மற்றும் பத்திரிக்கை, இதழ்கள் வெளியிட்டாளர்களும் அவர்கள் வெளியீட்டில் ஒரு நகலை கன்னிமாரா நூலகத்திற்கு அனுப்ப வேண்டியது கட்டாயம். எனவே 1954-க்கு பிறகு வெளியான அனைத்து வெளியீடுகளும் கன்னிமாரா நூலகத்தில் கிடைக்கும்.

இது போக இங்கிலாந்தில் உள்ள ஏராளமான வெளியீடுகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி வெளியீடுகள் போன்றவையும் இந்த நூலகத்தில் உள்ளது. மேலும் ஆண்டுதோறும் மாநில அரசு ஒதுக்கும் நிதியை கொண்டும் ஏராளமான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்த நூலகத்தில் பாதுகாக்கப் படுகிறது.

தற்போது கல்வி அறிவு வளர்ச்சி மற்றும் வெளியீடுகள் பெருகி வருவதால் கன்னிமாரா நூலகத்திற்கு மேலும் இட நெருக்கடி வரும் என்பது தவிர்க்க முடியாதது தான்.

ஆசியாவில் உள்ள மிகப் பெரிய நூலகங்களில் கன்னிமாரா நூலகமும் ஒன்று. இங்கு ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஏராளமான புத்தகங்களுக்கான பட்டியல் இணைய தளத்திலும் உள்ளது. தற்போது 7,70,000 புத்தகங்கள் இருப்பு உள்ளன. இது போக 3500 கால இதழ்கள் (Periodical) மற்றும் 160 பத்திரிக்கைகளும் நூலகத்திற்கு வருகின்றன.

தற்போது நூலகம் முழுவதும் கணிணி மயமாக்கப்பட்டு வாசிப்பவர்கள் இலகுவாக மேற்கண்ட புத்தகங்களை தேடி எடுத்து வாசிக்க வசதி செய்யப் பட்டுள்ளது.

கன்னிமாரா நூலகத்தில் உள்ள புத்தகங்களில் சில அரிய புத்தகங்களை பற்றி பார்ப்போமா!!

1) 1608-ல் அச்சடிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் இங்கு பாதுகாக்கப் படுகிறது
2) 1678-ல் இருந்து 1703 வரை வெளியிடப்பட்ட Hourtus Indicus Malabaricus 12 Volumes – author Rheed etc., இங்கு பாதுகாக்கப்படுகிறது
3) 1696-ல் வெளியிடப்பட்ட Ovington(J)   என்பவர் எழுதிய A Voyage to Suratt in the years 1689 என்ற நூல் இங்கு பாதுகாக்கப்படுகிறது.
4) 1711-ல் Lockyer(Charles) என்பவர் எழுதிய An account of the Trade in India புத்தகமும் 1717-ல் அவர் எழுதிய 1)    An account of the religion and Government, leering and economy, etc. of the Malabarians. இங்கு பாதுகாக்கப் படுகிறது
5) 1768-ல் Burmanni(Nicolai) என்பவர் எழுதிய Flora Indica என்ற புத்தகமும் இங்கு பாதுகாக்கப் படுகிறது.

இங்கு பாதுகாக்கப் படும் 1608-ல் அச்சிடப்பட்ட பைபிள் இங்கிலாந்தில் இருக்கும் மிக பழைமையான பைபிள்க்கும் மிக முந்தையது என கூறப்படுகிறது. பைபிள் உலகிலேயே முதன் முதலில் ஜெனிவாவில் தான் 1960 அச்சிடப்பட்டது. அது ஜெனிவா பைபிள் என கூறுவார்கள்.

இவை போக 1881-ல் உள்ள சென்சஸ் ஆப் இந்தியா, 1801-ல் அச்சிடப்பட்ட Plutarch’s Live  மற்றும் 1882-ல் Beschi எழுதிய Grammar of High Dialect of the Tamil Language  என்ற புத்தகமும் இங்கு உள்ளது. இங்கு மிக அபூர்வமான தமிழ் புத்தகங்களோடு லத்தீன் மொழியில் உள்ள புத்தகங்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

இந்த நூலகத்தின் நிர்வாகம் புத்தகங்களை சீராகவும் ஒழுங்காகவும் நல்ல முறையில் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அபூர்வ புத்தகங்கள் செல்லரிக்காமல் தடுப்பதற்காக 2006-ல் புத்தகங்களுக்கு மருந்து அடிப்பதற்கு என தனியாக ஒரு அறை ஏற்படுத்தப் பட்டது. அங்கு பாதுகாக்கப் படும் நூல்கள் ஏதாவது ரெபரன்ஸ்க்கு வேண்டும் என்றால் மட்டும் கொடுக்கப்படும். பொது மக்கள் சாதாரணமாக படிக்க முடியாது. அனைத்து அபூர்வ நூல்களும் டிஜிட்டல் மயமாக்கப் பட்டு சிடிக்களிலும் பாதுகாக்கப் படுகிறது.

இந்த நூலகத்தை பற்றி சில வருத்தமான செய்திகளையும் பார்ப்போமா!!

சென்னை மாநில மத்திய நூலகச் சட்டத்தை கொண்டு வர காரணமாக இருந்து கன்னிமாரா நூலகத்திற்கு மத்திய நூலக அந்தஸ்து வழங்கியது மாநிலத்தின் முதல் கல்வி அமைச்சரான திரு.எஸ்.ஆர்.ரங்கநாதன் (எஸ்.ஆர்.ஆர்). அவரது 100-வது பிறந்தநாள் 1991-92-ல் கொண்டாடப் படும் போது இந்திய அரசு அவரை கவுரவப்படுத்தும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்டது. ஆனால் இன்று வரை  இந்த நூலகத்தின் எந்த பகுதிக்கும் அவர் பெயர் சூட்டுவதற்கு எந்த அரசியல் தலைவர்களும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

பழமை வாய்ந்த கன்னிமாரா நூலகத்தின் பழைய கட்டிடம் புதுப்பிக்கப் பட்ட பிறகும் கூட பொது மக்கள் அங்கு அனுமதிக்கப் படவில்லை. OB என அழைக்கப்படும் மேற்கண்ட ஓல்ட் பிளாக்கிற்கு நூலக பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். இதர நபர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த நூலகத்தில் உறுப்பினராவது ஒரு இமாலய சாதனை ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களின் கையொப்பம் மற்றும் வசிப்பிட சான்று போன்ற ஏராளமான ஆவணங்கள் தேவை. எனவே இவற்றை எளிமை படுத்தி பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், அறிஞர் அண்ணா நூலகம் ஆகியவற்றில் எளிமையாக உறுப்பினர் சேர்க்கப்படுவது போல் இங்கும் சேர்க்கப்படலாம்.

இவற்றையும் இந்த நூலகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க அப்போது நடவடிக்கை எடுத்த சென்னை மாகாண முதல் கல்வி அமைச்சரான திரு.எஸ்.ஆர்.ரங்கநாதனை கவுரவபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்குமா என கல்வியாளர்கள் மட்டும் அல்ல நூலகத்தை பற்றி நன்கு தெரிந்த பொது மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

சிலர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் மீண்டும் அரியணை ஏறி கல்வி அமைச்சர் திரு.ரங்கநாதனின் 125-வது ஆண்டு விழாவை 2016-17-ல் சிறப்பாக கொண்டாடுவார்கள் என கூறுகிறார்கள். 

எப்படியாயினும் ரங்கநாதன் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டு அவருக்கு ஒரு கவுரவம் கொடுக்கப் பட வேண்டியது நியாயம் தானே!!!

பொது இன்சூரன்ஸ் சட்டத்தில் உள்ள ஒரு தவறு

அனைத்து மோட்டார் வாகனங்களும் காப்பீடு செய்திருக்க வேண்டும். காப்பீடு சான்று வைத்திருக்க வேண்டும். இது மோட்டார் வாகன சட்டப்படி கட்டாயமானது. காப்பீடு பாலிசி வழங்கும் போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் லீகல் இன்சூரன்ஸ் கட்டணம் என ரூபாய் 80 வசூலிப்பார்கள். இதன் மூலம் நீதிமன்றத்தில் இருந்து மேற்கண்ட வாகனத்தில் சென்ற நபர் காயமடைந்தாலோ, மரணம் அடைந்தாலோ அவருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் தொகையை அந்த காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கும். ஓட்டுனருக்கும் கூட இது பொருந்தும். ஆனால் வாகன உரிமையாளருக்கு இது பொருந்தாது.

ஒரு தனியார் வாகன உரிமையாளர் அவரது வாகனத்தில் சென்று அதில் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தால் அந்த ஓட்டுனருக்கு நீதிமன்றம் ரூ.10 லட்சம் கொடுக்க சொன்னால் இன்சூரன்ஸ் கம்பெனி கொடுக்கும். ஆனால் உரிமையாளருக்கு மொத்த கிளைம் ஒரு லட்சம் மட்டுமே. எனவே சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள். இது பற்றிய விபரங்கள் பொதுவாக உரிமையாளர்களுக்கு தெரிவதில்லை. 

ஒரு நல்ல அரசு மக்களை சார்ந்த அரசு செய்ய வேண்டியது உரிமையாளருக்கும் இது போல் ஒரு கட்டணத்தை பெற்றுக் கொண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என சட்ட திருத்தம் செய்து அவ்வாறு பாலிசி வழங்க சொல்ல வேண்டும். மோடி அரசு இதில் கவனம் செலுத்துமா?

ஸ்மார்ட் சிட்டி என்னும் தவறான திட்டம்

ஐயா, பிஜேபி அரசு இந்தியாவின் தொழில் வளத்தை பெருக்குவதற்கு ஸ்மார்ட் சிட்டி என்னும் ஒரு கனவு திட்டத்தை அறிமுகப்படுத்தி பெரிதாக விளம்பர படுத்தி வருகிறது. இது தேர்தல் நேரத்தில் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும். இது கருப்பு பணத்தை மீட்பதில் இருந்து செலுத்தப்படும் என வெற்று விளம்பரம் செய்தது போல் தான். 

ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைமுறையில் சாத்தியம் இல்லை. மூலப்பொருட்கள் கொண்டு வருவது, திறமை உள்ள வேலை ஆட்கள் கிடைப்பது, தடையற்ற மின்சாரம், தேவையான நீர், தேவையான அனுமதிகள் போன்ற ஏராளமான இனங்கள் இதில் அடங்கி உள்ளன. ஒரு நகரத்தை உருவாக்குவதால் தொழில் வளராது. துறைமுகத்தை ஒட்டி இருந்தால் ஏற்றுமதி தொழில் வளரும் அல்லது அதிக ஜனத்தொகை உள்ள பெரு நகரங்கள் மற்றும்; தேவையான அளவு மனித உழைப்பு கிடைக்கும் இடங்கள் போன்றவை தேவை. இவர்களது இந்த விளம்பரம் நாங்குனேரி பக்கத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் என முரசொலி மாறன் காலத்தில் ஒரு கனவு திட்டம் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டு அடிக்கல் நாட்டப் பட்டது. குடிநீர் இல்லை. மின்சாரம் இல்லை. கழிவு நீர் வசதி இல்லை. வேலையாட்கள் இல்லை. இதனை ஒட்டி துறைமுகம் இல்லை. இவ்வாறு இருக்கும் போது அந்த திட்டம் எவ்வாறு வெற்றி பெரும். இறுதியில் திட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது. வெளியே அடுத்த ஆட்சி வந்ததால் திட்டம் தோல்வி என கூறினார்கள். உண்மை அது அல்ல. இங்கு உற்பத்தி செய்யும் பொருள் ஏற்றுமதிக்கு தூத்துக்குடிக்கு செல்ல வேண்டும். அதற்கே இரண்டரை மணி நேரம் ஆகும். அதே போல் இறக்குமதி செய்யப்படும் பொருள் இங்கு கொண்டு வரவும் இரண்டரை மணி நேரம் ஆகும். இதே நடைமுறை சிக்கல்கள் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் வரும்.

ஆனால் அதனை செயல்படுத்துவதாக கூறி முதலில் விளம்பரமும் பிறகு பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும் அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம்  பல்வேறு வகையான கமிஷன் என்று அரசியல் வாதிகள் சந்தோசமாக இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் இந்த திட்டம் படுதோல்வி அடையும். 

இதற்கு வழிவகுப்பதற்கு இவர்கள் ஆலோசனைக்கு வைத்த நபர்கள் அனுபவ அறிவு இல்லாதவர்கள் என்பதையே இது காட்டுகிறது. எனவே இது தோல்வி அடைய போகிற நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு திட்டம்.

நிலநடுக்கமும் சில அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளும்

நிலநடுக்கமும் சில அடிப்படை பாதுகாப்பு வழிமுறைகளும்

கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த நில நடுக்கம் 7000 உயிர்களுக்கு மேல் பலி வாங்கியது. பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் சுமார் 20000 நபர்களுக்கு மேல் மரணம் அடைந்தார்கள்.

பூகம்பம் கடலுக்கு அடியில் ரிக்டர் அளவில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நடந்தால் அது சுனாமியாகி கடற்கரை அருகில் உள்ள மக்களையும் குடியிருப்புகளையும் பாதிக்கிறது. 2004-ம் வருடம் இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் இந்தியா, இலங்கை நாடுகளில் சுனாமி ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டார்கள்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சராசரியாக ஆண்டுக்கு 5 இடங்களில் நிலநடுக்கம், பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. 2004 சுனாமிக்கு பிறகு இந்தியாவிலும் பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு (Disaster Management Committee) என ஒரு அமைப்பு இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மாதிரி பேரிடர் மீட்பு குழு பல்வேறு நாடுகளில் அமைக்கப் பட்டுள்ளன. நேபாள நிலநடுக்கத்திற்கும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மீட்புகுழுவினர் சென்றனர். இது மனித நேய அடிப்படையில் அனைத்து நாடுகளாலும் மேற்கொள்ளப் படுகின்றன. நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியும் நேபாள நிலநடுக்கத்தின் பாதிப்புகளை மக்கள் தெரிந்து கொள்ள ஒளிப்பதிவாளர் மற்றும் செய்தியாளர்களை நேபாளத்திற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து நிலநடுக்கத்தின் பாதிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தமிழக மக்களுக்கு அவ்வப் போது செய்திகளாக வெளியிட்டது.

நேபாள நிலநடுக்கம் நமக்கு படித்து தந்த பாடம் என்னவென்றால் எப்போது நில நடுக்கம் வரும் என்பது யாராலும் உறுதியாக கூற முடியாது. எனவே நிலநடுக்கம் அல்லது பூகம்பம் ஏற்பட்டால் நாம் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை பாதுகாப்பு இனங்கள் அமெரிக்காவில் சர்வதேச பேரிடர் மேலாண்மை மீட்புகுழு தலைவர்  திரு. டக் கோப் என்பவரால் குறிப்பிடப் பட்டு உள்ளது. இது வரை அவர் 60 நாடுகளில் 875 நொறுங்கிய கட்டிடங்களில் மீட்பு பணி மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளின் மீட்புக் குழுக்களிலும் மற்றும் ஐநா சபையின் பேரிடர் நிவாரண குழு நிபுணராகவும் இரண்டு வருடங்கள் பணியாற்றி 1985-ல் இருந்து இத்துறையில் பணியாற்றி வருகிறார். முதன் முதலில் மெக்சிகன் நகரில் நடந்த 1985-ல் நடந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப் பட்ட பள்ளியில் மீட்பு பணி மேற்கொண்டுள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் அனைத்து மாணவர்களும் வகுப்பறையின் மேஜைக்கு கீழே பதுங்கி உள்ளார்கள். பள்ளியின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து மேஜையோடு சேர்த்து முழுவதும் நசுக்கப் பட்டு விட்டார்கள். அவர்கள் மேஜைக்கு வெளியே மேஜையை ஒட்டி பதுங்கி இருந்தால் மேற்கூரை மேஜையில் விழுந்து நசுக்கும் போது தரை மேற்கூரையின் திண்ணம் இரண்டும் இரண்டு கோணங்களாக இருந்து முக்கோண வடிவில் அந்த மாணவர்கள் பாதுகாக்கப் பட்டு இருப்பார்கள் என்பதை அவர் குறிப்பிடுகிறார்.


மேஜையின் மையப் பகுதி கான்கிரிட்டால் நசுக்கப்படுவதையும் ஆனால் மேஜையை ஒட்டி உள்ள பகுதியில்
ஒரு முக்கோண வடிவ அமைப்பு உருவாவதால் உயிர் சேதம் இல்லாமல் இருக்கும் என்பதையும் காண்பிக்கும் படம்

எனவே நில நடுக்கம் ஏற்பட்டால் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடி விடுவது மிகுந்த பாதுகாப்பானது.

அதற்கு வாய்ப்பு இல்லா விட்டால் கட்டிடத்தின் உள்ளே உள்ள பொருட்களை ஒட்டி இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கினாலும் பாதுகாக்கப் படுவார்கள்.

அமெரிக்காவின் சர்வதேச பேரிடர் மேலாண்மை மீட்பு குழு தலைவர் நிலநடுக்க பாதுகாப்பிற்காக கூறும் சில வழிமுறைகள்

1)        கட்டிடத்தின் உள்ளே உள்ள பொருட்களுக்கு கீழே பதுங்க கூடாதுமேஜை மற்றும் கார்களுக்கு கீழே பதுங்குபவர்கள் இடிபாடுகளால் நசுக்கப் படுகிறார்கள்.


கார் நசுங்கி மரணம்

2)        பூனை நாய் முதலியவை ஏதாவது ஒரு பொருளை ஒட்டி படுத்திருப்பதால் அவை நசுக்கப் படுவதில்லை. நில அதிர்ச்சியில் சிறு குழந்தைகளும் இவ்வாறு உருட்டப்பட்டு ஒரு பெரிய பொருளை ஒட்டி தள்ளப்படுவதால் அவர்களும் நசுக்கப் படுவதில்லை. எனவே படுக்கையை ஒட்டி அல்லது சோபாவை ஒட்டி அல்லது ஏதாவது பெரிய பொருட்களை ஒட்டி இருந்தால் அந்த பொருட்கள் ஓரளவு நசுங்கும். ஆனால் ஒட்டி இருக்கும் நபர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுவது தவிர்க்கப் படும்.

பொருட்களை ஒட்டி இருந்தால் முக்கோண வடிவம் ஏற்பட்டு பாதுகாக்கப் படும் என்பதற்கான அடையாளம்



பெரிய பொருளை ஒட்டி இருந்தால் பொருள் சேதமாகும்.                            மேஜை தடுப்பு இருந்ததால் அப்பகுதி இடைவெளியோடு

உயிர் ஆபத்து குறைவு என்பதை காட்டும் வரைபடம்                                                             பாதுகாக்கப்பட்டதையும்  இதர பகுதி நசுக்கப் பட்டதையும் காட்டும் இடிபாடு

3)        நிலநடுக்கத்திற்கு மரத்தால் ஆன கட்டிடமே பாதுகாப்பானது. மரம் அசையும் தன்மை உள்ளதால் நிலநடுக்கத்தின் போது அசைந்து கொடுத்து இடிந்து விழாமல் இருக்கும். கட்டிடம் நொறுங்கி விழுந்தாலும் பாதுகாப்பிற்கு ஏராளமான இடைவெளிகள் மரத்தால் இருக்கும். அவை நொறுங்கி விழும் போது செங்கள் ஓடு முதலியவை நொறுங்கி விழுந்து சில காயங்களை ஏற்படுத்தும். ஆனால் கான்கிரீட் சிலாப் போல் மரணத்தை ஏற்படுத்தாது.





            


4)        இரவில் படுக்கையில் தூங்கும் போது நிலநடுக்கம் ஏற்பட்டால் படுக்கையை ஒட்டி கீழே உருண்டு படுத்து விட வேண்டும். படுக்கையை சுற்றி நான்கு புறமும் நில நடுக்க இடிபாடுகளில் ஒரு பாதுகாப்பு முக்கோணம் உருவாகும். எனவே அது பாதுகாக்கும். (நட்சத்திர ஹோட்டல்களில் இவ்வாறு அறிகுறிகள் கதவின் பின்பக்கத்தில் எழுதப் பட்டு இருப்பதால் நிலநடுக்கத்தில் ஹோட்டல் தங்குபவர்களின் உயிர் சேதம் குறைவு.)


5)        நில நடுக்க நேரத்தில் கட்டிடத்தில் இருந்து கதவு அல்லது ஜன்னல் வழியாக உடனே வெளியேற முடியாவிட்டால் உருண்டு சோபா அல்லது பெரிய சேர் அல்லது கட்டில்  அல்லது மிகப் பெரிய பொருள் ஆகியவற்றை ஒட்டி சுருண்டு படுத்துக் கொள்வது அல்லது பாதுகாப்பான முறையில் அமர்வது உயிர் சேதத்தை தவிர்க்கும்.






6)        நில நடுக்க நேரத்தில் கதவின் நிலைப்படிக்கு கீழே நிற்பவர்கள் மேலே இருந்து வரும் இடிபாடுகளாலோ அல்லது நிலைபடி உடைந்து கதவு இரண்டாக பிளப்பதாலோ மரணம் அடையும் அபாயம் உள்ளது.

7)        நிலநடுக்கம் ஏற்படும் போது ஏணிபடிகளுக்கும் செல்லக் கூடாது. பொதுவாக அவை கட்டிடம் கட்டி முடித்த பிறகு கட்டப்படுவதால் தனியாக நொறுங்கி விழும் அல்லது கட்டிடம் இடிந்து விழுந்த பிறகு எடை தாங்காமல் நொறுங்கும்.

8)        வாய்ப்பு இருந்தால் கட்டிடத்தில் வெளிபக்க காம்பவுண்டு சுவரை ஒட்டியோ அல்லது அதற்கும் வெளியே சென்று விட வேண்டும்கட்டிடத்திற்கு வெளியே செல்லாமல் பிரதான கட்டிடத்தை ஒட்டி நிற்பது சில சமயங்களில் ஆபத்தாகவே முடியும்.



9)        நில நடுக்க காலத்தில் வாகனத்தின் உள்ளே இருக்கும் நபர்கள் வாகனத்தோடு சேர்த்து நசுக்கப் படுகிறார்கள். சான்பிரான்சிஸ்கோவில் நடந்த பூகம்பத்தில் காரின் உள்ளே இருந்த அனைவரும் மரணம் அடைந்தார்கள். அவர்கள் வாகனத்தை ஒட்டி வெளியே தரையில் அமர்ந்து இருந்தாலோ அல்லது படுத்திருந்தாலோ வாழ்க்கை முக்கோன முறையில் பாதுகாப்பு இடைவெளி ஏற்படுத்தப்ப பட்டு பாதுகாக்கப் பட்டு இருப்பார்கள்.

10)      நில நடுக்கத்தில் உள்ளே உள்ள பொருட்கள் சரிந்து விழும் இடத்தில் உள்ள நபர்களுக்கு உயிர் ஆபத்து குறைவு என்பதை ஏராளமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட கட்டித்தில் மீட்பு பணி நடத்தும் போது இவர் தெரிந்துள்ளார்.



இந்த அடிப்படை விபரங்கள் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது தானே!!