Thursday, 22 October 2020

நெடுவாசலாக மாற போகும் குமரி மாவட்டம்

நான் ஆய்வுக்கு தான் அனுமதி கொடுத்தேன். இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி கொடுக்கவில்லை என பிரச்சனை பெரிதான உடன் மு.க.ஸ்டாலின் நெடுவாசல் பற்றி ஒரு அறிக்கை கொடுத்தார். அதே தவறை தற்போதைய முதல்வர் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் செய்கிறார். மத்திய அரசின் ஐ.ஆர்.இ நிறுவனம் குமரி மாவட்டத்தில் தாதுமணல் தொழிலில் உள்ளது. பல உரிமங்கள் பெற்றுள்ளது. எல்லா தனியார் நிலங்களையும் ஆக்கிரமித்து மணல் அள்ளி செல்கிறது. பட்டா நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் போது ஒரு செண்ட்க்கு 17 ரூபாய் என நிர்ணயித்தது தவறு. அதனை 25 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும் என நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தார்கள் அதாவது ஏக்கர் ரூபாய் 2500 வேண்டும் என கேட்டார்கள். தக்கலை சார்பு நீதிமன்றம் ஏக்கருக்கு 2100 ரூபாய் நில உரிமையாளருக்கு வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஐஆர்இஎல் வழக்கு நடத்தி நில உரிமையாளர் அந்த சிறிய தொகையை கூட 25 வருடங்களாக பெற விடாமல் தடுத்தது. மீண்டும் 1700 ஏக்கர் கீழ்மிடாலம், மிடாலம், கீழ்குளம், ஏழுதேசம், கொல்லங்கோடு கிராமங்களில் ஆர்ஜிதம் செய்ய அரசை அணுகியது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.சுனில்பாலிவால் சர்வே அதிகாரிகளை ஒவ்வொரு புல எண்ணாக ஆய்வு செய்ய சொல்லி ஐஆர்இஎல் கேட்கும் நிலங்கள், தென்னை தோப்பு, விவசாய பூமி, குடியிருப்பு, பள்ளி, தேவாலயங்கள், சாலை, குளங்கள் என அனைத்தும் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்கள். எனவே அவற்றை ஒதுக்க முடியாது. காலியாக உள்ள 250 ஏக்கர் நிலத்தை மட்டும் ஒதுக்கலாம் என அறிக்கை செய்தார். அந்த அறிக்கையை மறைத்து விட்டு அதே கிராமத்தில் தற்போது 3500 ஏக்கர் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய அணுகினார்கள். ஏனென்றால் இப்பகுதியில் உள்ள அனைத்தும் கடற்கரை நிலங்கள். கிறிஸ்தவ சமுதாயத்தினர் தான் பெரும்பான்மையினர். எனவே அந்த நிலத்தை அரசு கம்பெனி அபகரிக்க நீண்டநாள் திட்டமாக ஏற்பாடு செய்யப் பட்டது. 250 ஏக்கர் மட்டுமே காலி நிலம் உள்ளது என கலெக்டர் சுனில்பாலிவால் தாக்கல் செய்த அறிக்கையை ஒதுக்கி தள்ளி விட்டு 3500 ஏக்கரை ஐஆர்இஎல்-க்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. இனி மத்திய அரசு மாநில அரசு கேட்டபடி தான் நாங்கள் ஒதுக்கி உள்ளோம் என கூறுவார்கள். மாநில அரசு சொல்லும் கட்டிடங்களுக்கு பாதிப்பு இல்லாமல் தான் சுரங்க பணி செய்ய வேண்டும் என நாங்கள் நிபந்தனை விதித்தோம் என கூறுவார்கள். மொத்தத்தில் மேற்கண்ட 5 கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வெகுவிரைவில் இழக்க போகிறார்கள். பிறகு மு.க.ஸ்டாலி;ன் சொல்லியது போல் நான் வெறுமனே கடிதம் தான் எழுதினேன் என தற்போதைய முதல்வர் சொல்ல போகிறார். இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டம் வெகுவிரைவில் பாலை நிலமாக மாற போகிறது. 





Thursday, 30 July 2020

EIA 2020 - கவுரவ கொள்ளையை தடுத்து நிறுத்திய மத்திய அரசுக்கு பாராட்டுக்கள்

கொள்ளையில் பல வகை உண்டு. சிலர் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடிப்பர். சிலர் பயமுறுத்தி கொள்ளை அடிப்பர். சிலர் புத்தியை பயன்படுத்தி கொள்ளை அடிப்பர். சில படித்த புத்தி உள்ள கொள்ளையர்கள் சுற்றுச்சூழல் என்ற பெயரில் கொள்ளை அடிப்பர். இந்த கொள்ளையை முழுவதும் தற்போது மத்திய அரசு EIA 2020 என அறிவிக்கை செய்ததன் மூலம் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளது. இதற்கு பாராட்டுக்கள். இதனால் உலகம் அழிந்து விடும் என கூக்குரல் இடுகிறார்கள். அழிவு எப்போது தொடங்கியது. திமுக ஆட்சிக்கு வந்த உடன் தொடங்கியது. அதற்கு முன்பு பஞ்சாயத்துக்கள், பொது சுகாதாரம், குடிநீர் பராமரிப்பு மற்றும் சாலை பராமரிப்பு மூன்றையும் மட்டும் செவ்வனே செய்து வந்தார்கள். கொள்ளை அடிப்பதற்காக பஞ்சாயத்துக்கள் கட்டிடம் கட்டலாம் என திமுக ஆட்சியில் ஒரு உத்தரவிட்டார்கள். அதன் பிறகு பொது சுகாதார பராமரிப்பும், குடிநீர் பராமரிப்பும் இல்லாமலேயே போய் விட்டது. அப்போது செய்த சிறிய தவறில் வருமானம் வருவதை கண்டு பிறகு உள்ள ஆட்சியாளர்களும் அதில் கைவைக்க தயாராக இல்லை. அறிவில்லாதவர்கள் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் என்பது. ஏற்கனவே நீர் மாசு தடுப்பு சட்டம் மற்றும் காற்று மாசு தடுப்பு சட்டம் என இரண்டு சட்டங்கள் உள்ளன. இவற்றை சரியாக நடைமுறை படுத்தினாலே சுற்றுச்சூழல் முழுவதும் பாதுகாக்கப் படும். இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் போது கோவாவில் முகாமிட்டு இருக்கும் போது காலையில் கடற்கரையில் நடை பயிற்சி செய்யும் போது அங்கு ஏராளமான நபர்கள் கடற்கரையில் மலம் கழித்துள்ளதை கண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் வருத்தப் பட்டு உள்ளார். அதன் அடிப்படையில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப் பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் நீங்கள் நினைத்தது போல் உங்கள் இடமாக இருந்தால் கூட தொழில் செய்ய முடியாது.

நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால் "எ" என்பவர் தொழிற்சாலை அமைக்க உத்தேசித்துள்ளார். இது பற்றி கருத்து கேட்பு இந்த தேதியில் நடக்கும். அனைவரும் கருத்து சொல்லலாம் என பத்திரிக்கையில் விளம்பரம் செய்ய வேண்டும். உடனடியாக  கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், ஜாதி தலைவர், கட்சி தலைவர், வட்ட கிளை, மாவட்டம் என பலநூறு நபர்கள் தனிதனியாக வருவார்கள். அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்க வில்லை என்றால் நான் இதனால் பாதிப்பு என கருத்து கேட்பில் சொல்லுவேன். எழுதியும் கொடுப்பேன் என கவுரவமான மிரட்டல் விடுப்பார்கள். இதில் சமூக ஆர்வலர் என்று மனிதரில் விவசாயம் செய்பவர்களும் அடக்கம். இவர்களுக்கு மூலதனம் கொஞ்சம் பிசறாமல் ஆங்கிலம் பேசுவது மட்டும் தான். இம்மாதிரி மிரட்டல்களுக்கு பயந்தே யாரும் தொழில் செய்ய முடியாத நிலையும் இருந்தது. அந்நிய நிறுவனங்களும் இங்கு தொழில் தொடங்க அச்சப்படும் நிலை வந்தது.

இதனை கண்கூடாக அறிந்து இனிமேல் இவ்வாறு கருத்து கேட்பு தேவையில்லை என கூறுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இதனால் என்னென்ன சாதக பாதகங்கள் என்பதை சம்பந்தப் பட்ட நிறுவனங்களே அறிக்கையாக தயாரித்து அரசிடம் கொடுக்க வேண்டும். அதில் தவறான தகவல் கொடுக்கப் பட்டு இருந்தாலோ அல்லது தவறாக இருந்தாலோ அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் கழிவு நீர் மற்றும் புகை ஆகியவற்றிற்கு ஏற்கனவே இந்திய அரசு தர நிர்ணயம் செய்துள்ளது. அதை மீறினால் நேரடியாக மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரியும் வகையில் ஆன்லைனில் இணைப்பு கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனவே தவறாகவோ அல்லது கூடுதலாகவோ வந்தால் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக் கொள்ள முடியும். எவ்வளவு வருகிறது என்பதை பொது மக்களும் தெரிந்து கொள்வதற்கும் வசதி செய்யப் பட்டு உள்ளது. ஆனால் கவுரவமாக மிரட்டி மனிதரில் விவசாயம் செய்து தொழில் முனைவோரிடம் பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்திற்கு இது ஒரு முற்றுப்புள்ளியாகி விட்டது. அவர்கள் இனி என்ன செய்ய முடியும். மத்திய அரசு இவர்களுக்கு இம்மாதிரி பணம் அள்ளி கொடுக்க முடியுமா? முடியாது அல்லவா?

எனவே கவுரவ கொள்ளை நடத்தும் சமூக விரோதிகளின் வாழ்வாதாரத்தை அழித்த மத்திய அரசு ஒழிக என அவர்கள் கூறுவது நியாயம் தானே!!!